Published : 20 Nov 2018 09:24 PM
Last Updated : 20 Nov 2018 09:24 PM

சொரபுதீன் என்கவுண்டர் வழக்கு: அமித் ஷா அரசியல், பண ரீதியாக ஆதாயம் அடைந்தார்: சிபிஐ அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்

குஜராத் போலீஸாரால் கடந்த 2005-ம் ஆண்டு எண்கவுன்ட்டர் செய்யப்பட்ட சொரபுதீன் ஷேக் கொலையில் பாஜக தலைவர் அமித் ஷா, பண ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார். அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் என்பவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு அரசியல் தலைவர்களை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்று கூறி அவரை குஜராத் தீவிரவாத தடுப்பு போலீஸார் கைது செய்தனர். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி என்கவுண்ட்டரில் சொராபுதீன் சேக்கை சுட்டுக்கொன்றனர். அடுத்த சில நாட்களில் சொராபுதீன் ஷேக் மனைவி கவுசர் பியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

மேலும், சொராபுதீன் ஷேக் உதவியாளர் துளசி பிரஜாபதியையும் குஜராத், ராஜஸ்தான் போலீஸார் சேர்ந்து கடந்த 2006, டிசம்பர் மாதம் சுட்டுக்கொன்றனர்.

இந்த 3 கொலைகளிலும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து 2010ம் ஆண்டில் அமித் ஷாவை சிபிஐ கைது செய்தது. ஆனால், 3 மாதத்தில் இவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மொத்தம் 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜி வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்என் உள்ளிட்ட பலர் அடங்குவார்கள். இந்த வழக்கு 2010ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது, அதன்பின் 2014-ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் அமித் ஷா வை விடுவித்தது.

இந்நிலையில், மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. நீதிபதி எஸ்.ஜே. சர்மா முன்னிலையில் சொராபுதீன் ஷேக் வழக்கை விசாரணை செய்த தலைமை விசாரணை அதிகாரி அமிதாப் தாக்கூர் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

குஜராத் போலீஸாரால் கடந்த 2005-ம் ஆண்டு எண்கவுன்ட்டர் செய்யப்பட்ட சொரபுதீன் ஷேக் கொலையில் பாஜக தலைவர் அமித் ஷா, பண ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார். அகமதாபாத்தின் பிரபலமான படேல் சகோதரர்களிடம் இருந்து அமித் ஷாவுக்கு ரூ.70 லட்சம் கொடுக்கப்பட்டது. தீவிரவாத தடுப்புப்பரிவு டிஐஜி வன்சாராவுக்கும் ரூ.60 லட்சத்தை படேல் சகோதரர்கள் அளித்தனர்.

இந்தக் கொலையில் அமித் ஷா தவிர்த்து, தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஐஜி டி.ஜி.வன்ஜாரா, உதய்பூர் முன்னாள் எஸ்.பி. தினேஷ் எம்.என்., அகமதாபாத் முன்னாள் போலீஸ் எஸ்.பி. ராஜ்குமார் பாண்டியன், அகமதாபாத் முன்னாள் போலீஸ்துணை ஆணையர் அபய் சுதாஸமா ஆகியோரும் அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்தனர்.

சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அரசியல்ரீதியாக அல்லது பண ரீதியாக ஆதாயம் அடைந்தது தொடர்பான எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளவில்லை. வன்சாரா, பாண்டியன், தினேஷ்,சுதாஸ்மா ஆகியோர் உத்தரவுப்படிதான் குற்றம்சாட்டப்பட்ட 20 அதிகாரிகளும் செயல்பட்டனர்.

மேலும், சொராபுதீன் ஷேக் உடலில் இருந்து 92 கரன்சி நோட்டுகள் எடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அது குறித்து விசாரணையும் நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x