Published : 19 Nov 2018 08:47 PM
Last Updated : 19 Nov 2018 08:47 PM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாடுமுழுவதும் மக்களிடம் ஆதரவு இருக்கிறது, வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை அயோத்தி பெறும். ராமரால்தான் இந்தியாவும் உலக அளவில் சூப்பர்பவரானது என்று உத்தரப்பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச கலாச்சாரத்துறை, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சவுத்ரி லக்னோவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசாக இருந்தாலும்சரி எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையை, உணர்வுகளைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும். அயோத்தியில் மிக விரைவாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதைத்தான் நாடுமுழுவதும் உள்ள பெருவாரி மக்கள் நினைக்கிறார்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்போது, வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெறும்.
லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அயோத்திக்கு வருவார்கள், அயோத்தியும் வளர்ச்சிபெறும். உலகமே இங்கு நடக்கும் வளர்ச்சியைப் பார்க்கும், ராமரால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைக்கும்.
சமீபத்தில் அயோத்தியில் நடத்தப்பட்ட தீப உத்சவத்தின் மூலம் இந்தியாவை உலகளவில் சூப்பர்பவராக்கியது ராமர்தான் என்கிற பாடத்தை உணர்த்தி இருக்கிறோம். ராமர் யாருடனும் ஒப்பிடமுடியாத மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். ராமர்தான் எங்களுடைய ஆதர்ச நாயகன். ராமரால்தான் நாடு சூப்பர் பவரானது.
முகாலயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அயோத்தியின் வளர்ச்சிக்கு யாரும் உதவவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. உ.பி மாநிலத்துக்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின்புதான் அயோத்தி நகரம் மீது கவனம் செலுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளாகஎந்தவிதமான வளர்ச்சிப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டனர்.
இவ்வாறு அமைச்சர் சவுத்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT