Last Updated : 19 Nov, 2018 08:01 PM

 

Published : 19 Nov 2018 08:01 PM
Last Updated : 19 Nov 2018 08:01 PM

சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: போலீஸாருக்கு கேரள உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சபரிமலையில் ஐயப்பன் கோயில்  சன்னிதானத்தில் பக்தர்களிடம் போலீஸார் கெடுபிடியுடன் நடந்து 30க்கும் மேற்பட்டோரைக் கைது செய்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை சன்னிதானத்துக்குள் பக்தர்கள் நுழைவதைத் தடுக்க போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது, பக்தர்களிடம் கெடுபிடி காட்டும் சம்பவம் தொடர்ந்தால், போலீஸார் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி வழிபாடு நடத்தவரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்தனர். பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சபரிமலை சன்னிதானத்தில் இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்குப் பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 70 பக்தர்களை போலீஸார் கைது செய்து ஓரிடத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சபரிமலை சன்னிதானம் பகுதியில் திரண்ட பக்தர்கள் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர். ராமச்சந்திர மேனன், என் அனில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலையில் பக்தர்கள் பலரை போலீஸார் நேற்று கைது செய்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சன்னிதானத்தை விட்டு பக்தர்களை இறங்கச் சொல்லி போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பக்தர்களிடம் கெடுபிடி காட்டிய சம்பவம் அடுத்த முறை நிகழ்ந்தால், போலீகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களில் வயதானவர்கள், குழந்தைகள், பெண்களிடம் போலீஸார் கெடுபிடியுடன் நடந்து கொள்ளக்கூடாது. நெய்அபிஷேகம் செய்வதற்கு டிக்கெட் எடுத்த பக்தர்களை சன்னிதானத்தை விட்டு இறங்கிச் செல்லுங்கள் என்று போலீஸார் வற்புறுத்தக்கூடாது. சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பான என்னென்ன விதிமுறைகள் போடப்பட்டுள்ளது குறித்து காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மாநில அரசின் வழக்கறிஞர் கூறுகையில், சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதை மீறிய பக்தர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 4 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும், இந்து ஐக்கியவேதி ஆர்வலர்களும்தான் காரணம் என்று தெரிவித்தார். மாநிலஅரசின் வாதத்தைக் கேட்டபின் வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x