Published : 19 Nov 2018 05:16 PM
Last Updated : 19 Nov 2018 05:16 PM

‘கஜா புயல்’ கேரளாவையும் கலக்கியது: கோட்டயத்தில் ஒரே கிராமத்தில் ‘அதிகபட்ச மழையை கொட்டித் தீர்த்த கொடுமை’

கஜா புயலின் தாக்கம் கேரள மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் கஜா புயலால் ஒரே நாளில் 280 மிமீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல், தமிழகத்தின் நாகை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அதன்பின் நிலப்பகுதியைக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக கேரளாவுக்குள் கஜா புயல் நுழைந்தது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழையை கொட்டித் தீர்த்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு கஜா புயல் கனமழையை தருவித்துச் சென்றது.

இதில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிகபட்சமான மழையை கஜா புயலால் பெற்றுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோழா எனும் கிராமத்தில் கடந்த 17-ம் தேதி ஒரே நாளில் மட்டும் கஜா புயலால் அதிகபட்சமாக 280 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மாநிலத்திலேயே கஜா புயலால் அதிகபட்ச மழையைப் பெற்றது இந்தக் கிராமம் என்று கேரள வானிலை மையம் தெரிவித்துள்ளதாக மலையாள தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாகை, திரூவாரூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் பெய்த மழை கூட கோழா கிராமத்தில் பேய் மழையை முறியடிக்கமுடிவில்லை. கொடைக்கானல் போட் கிளப்பகுதியில் அதிபட்சமாக 197 மிமீ மழை பெய்த நிலையில், அதைக்காட்டிலும் அதிகமாக கோழா கிராமத்தில் 280 மிமீ மழை பதிவானது.

கஜா புயல் கேரள மாநிலத்தை கடந்து சென்ற போது அதன் மூலம் மாநிலத்தில் சராசரியாக 40 மி.மீ மழை பதிவானது. எர்ணாகுளம் மாவட்டம் பிரவோம் பகுதியில் 186மி.மீ மழையும், இடுக்கிமாவட்டம் தொடுபுழாவில் 152மி.மீ, ஆழப்புழா மாவட்டம் சேர்தாலாவில் 117 மி.மீ மழை, இடுக்கி மாவட்டம் மூணாறு நகரில்116 மி.மீ மழையும் பதிவானது.

கேரள மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் 403 மி.மீ மழை பெய்யும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், 376 மி.மீ மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x