Last Updated : 19 Nov, 2018 03:49 PM

 

Published : 19 Nov 2018 03:49 PM
Last Updated : 19 Nov 2018 03:49 PM

குஜராத் கலவரம்: மோடியை விடுவித்த எஸ்ஐடி அறிக்கைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்கு தொடர்பில்லை என விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அந்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என தெரிவித்தது.

எஸ்டியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி கான்வில்கர் முன்னிலையில் கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்த விசாரணை 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி, இந்த மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்ஐடி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவர் வாதிடுகையில், “ஜாகியாவின் மனு விசாரணைக்கு ஏற்றதல்ல, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத்தை 2-வது மனுதாரராகவும் ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.

அதன்பின் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் கூறுகையில், “ஜாகியாவின் மனுவில் 2-வது மனுதாரராக சீதல்வத்தை ஏற்பது குறித்து அவரின் மனுவைப் பார்த்தபின் முடிவு செய்யலாம். இந்த மனுவைச் சிறிது நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்கிறோம். வரும் 26-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x