Published : 19 Nov 2018 03:01 PM
Last Updated : 19 Nov 2018 03:01 PM
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கை விசாரித்த வந்த அதிகாரி மணிஷ் குமார் சின்ஹா நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
தன்னிச்சை அமைப்பான சிபிஐயில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிபிஐ, ''சிபிஐ அமைப்பின் இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடர்கிறார். சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்'' என்று தெரிவித்திருந்தது.
தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அலோக் வர்மாவின் வழக்கை விசாரித்து வருகிறது. இதனிடையே, இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஹைதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்ஹா, திடீரென நாக்பூருக்கு மாற்றப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரித்து, தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மணிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT