Published : 19 Nov 2018 12:20 PM
Last Updated : 19 Nov 2018 12:20 PM
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் இருந்து அப்பாவி பக்தர்களை விரட்டியடித்தது கண்டிக்கத்தக்கது, கேரளாவில் ‘ஹிட்லர் ஆட்சி’ நடைபெறுகிறது என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை கோயில் நடை, மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி வழிபாடு நடத்தவரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்துள்ளனர்.
இந்தநிலையில், சன்னிதானத்தில் நேற்று இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு நேரத்தில் மலையை விட்டு இறங்க வாய்ப்பில்லை எனவும், காலையில் தான் இறங்க முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முற்பட்டனர்.
இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 70 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதுகுறித்து கொச்சியில் இன்று அவர் கூறியதாவது:
ஐயப்ப பக்தர்களை ஆர்எஸ்எஸ்காரர்கள் என முத்திரை குத்த கேரள இடதுசாரிக் கூட்டணி அரசு முயலுகிறது. இது ஆபத்தான போக்கு. சபரிமலையில் வழிபாடு நடத்திய பக்தர்களை இரவோடு இரவாக கீழே இறங்குமாறு போலீஸார் நிர்பந்தித்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். கேரளாவில் நடப்பது ஹிட்லர் ஆட்சி. போராட்டக்காரர்களை கைது செய்துகிறோம் என்ற பெயரில் அப்பாவி பக்தர்களை துன்புறுத்தும் போலீஸாரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT