Published : 19 Nov 2018 12:05 PM
Last Updated : 19 Nov 2018 12:05 PM
சர்ச்சைக்குப் பெயர் போன ராஜஸ்தான் எம்எல்ஏ கயான் தேவ் அஹுஜா, வரும் தேர்தலில் பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்டதால் தனியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாயுப்பு கேட்டிருந்தார் அஹுஜா. ஆனால் அவருக்குப் பதிலாக சுக்வந்த் சிங்கைக் களமிறக்கியது பாஜக. இதனால் அதிருப்தி அடைந்த அஹுஜா, தன்னிச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அவர், ''பாஜகவின் சர்வாதிகாரமான போக்குக்கு எதிராகப் போராடும் விதமாக, கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். அதேபோல தன்னிச்சையாகப் போட்டியிட உள்ளேன். ராம ஜென்ம பூமி, பசுக்கள் பாதுகாப்பு, இந்துத்துவா ஆகியவற்றில் தீவிரமாக உள்ளேன்'' என்று கயான் தேவ் அஹுஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெளியான வீடியோவில் அல்வார் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முதல்வர் வசுந்தரா ராஜேதான் காரணம் என்று கயான் தேவ் அஹுஜா தெரிவித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசிவரும் அஹுஜா, 3,000 ஆணுறைகளும், 500 கர்ப்பத்தடை ஊசிகளும், 10,000 சிகரெட் துண்டுகளும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினந்தோறும் கிடக்கும் என்று கடந்த 2016-ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT