Published : 19 Nov 2018 12:02 PM
Last Updated : 19 Nov 2018 12:02 PM
துயரத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 'கஜா' புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.
3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிலை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”கஜா புயலுக்குப் பிறகு தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்துள்ளேன். குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் மற்றும் மத்திய அரசு துயரத்தில் உள்ள தமிழக மக்களுக்கு துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Spoke to the Chief Minister of Tamil Nadu and inquired about the situation in the aftermath of Cyclone Gaja, expressed condolences to bereaved families. People and government of India are standing by those in distress in the state #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) November 19, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT