Published : 10 Nov 2018 07:35 PM
Last Updated : 10 Nov 2018 07:35 PM
உத்தரப் பிரதேச அரசு நகரங்களின் பெயரை மாற்றுவது என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு ‘லாலிபாப் மிட்டாய்’ கொடுத்து மக்களைக் கவர்வதுபோல் இருக்கிறது என்று சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
''உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பைசாபாத் மாவட்டத்தையும் அயோத்தி என்றும் , அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்றும் மாற்றி இருக்கிறார். உயிர்த் தியாகம் செய்த நூற்றுக்கணக்கான கரசேவர்களின் கோரிக்கை என்பது ராமர் கோயில்தானே தவிர ராமர் சிலை அல்ல.
ஆனால், உத்தரப் பிரதேச அரசோ பைசாபாத்துக்கு புதிய பெயரும், ராமர் சிலையும் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறது.
இது அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு வாக்காளர்களைக் கவர பாஜக 'லாலிபாப் மிட்டாய்' கொடுப்பது போன்றதாகும். உத்தரப் பிரதேச அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டதன் காரணமாகவே தற்போது அயோத்தி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி அதை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.
உலகில் ராமருக்கு ஏராளமான இடங்களில் பல்வேறு சிலைகள் இருக்கின்றன. இந்தோனேசியா, மொரிஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய ராமர் சிலைகள் உள்ளன. ஆனால், எங்கள் கோரிக்கை என்பது, அயோத்தியில் ராமருக்கு தனிக்கோயில் உருவாக்க வேண்டும் என்பதுதான்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT