Last Updated : 15 Oct, 2018 05:28 PM

 

Published : 15 Oct 2018 05:28 PM
Last Updated : 15 Oct 2018 05:28 PM

பாலியல் புகார் கூறிய பெண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் எம்.ஜே. அக்பர்

#மீ டூ மூலம் தன் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் மீது மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

எம்.ஜே.அக்பரின் மீது முதன்முதலில் புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், உள்ளிட்ட பலர் அடங்குவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அமைச்சர் அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, தன் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் கையாள்வார்கள் என்றும் அதன் பிறகு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் எம்.ஜே.அக்பர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சனிக்கிழமை அன்று, எம்.ஜே.அக்பர் பதவி விலகக் கோரி, அவரின் வீட்டின் முன் பெண் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் இளைஞர் அணியும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x