Published : 15 Oct 2018 02:27 PM
Last Updated : 15 Oct 2018 02:27 PM

குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதைப் பாதிக்கப்பட்டவரும் கூற வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு குற்ற வழக்கில் குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதை, அந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும் கூற வேண்டும், அதைக் கூற உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் நடந்த ஒரு தாக்குதல் வழக்கில் மல்லிகார்ஜுன் கொடகலி என்பவர் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்து, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தனர்.

நீதிபதி மதன் பி லோக்கூர் தனது தீர்ப்பில் கூறியதாவது:

''ஒரு குற்றத்தில் தண்டனை வழங்குவது என்பது சட்டப் புத்தகத்தை மட்டும் பார்த்து வழங்குவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை முழுமையாக வழங்காது. அந்தக் குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதைப் பாதிக்கப்பட்டவர்களும் கூற வேண்டும். அப்போதுதான் அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி வழங்கப்பட்டதாக அர்த்தமாகும்.

எங்களைப் பொறுத்தவரை குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதைப் பாதிக்கப்பட்டவரிடம் கேட்கத் தனியாக விசாரணை நடத்தலாம் என்பதைப் பரிசீலிக்கலாம். ஒரு குற்ற வழக்கு விசாரணையில் அரசு முன்னின்று செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களைச் சாட்சியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. ஒரு குற்றம் என்பது சமூகத்துக்கு எதிரானதாகவும், தண்டனைக்கு உரியதாகவும் பார்க்கப்பட்டு, தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஒருவிஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது, ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்ட நபர்களும், குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதைக் கூற சரிபாதி கடமைப்பட்டவர்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இதை அணுகும்போது, அவர்களும் தங்களுக்கு என்ன நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதைத் தெரிவிக்க உரிமை உள்ளவர்கள்.

இளம்பெண் ஒருவர் ஒரு கலவரத்தில் அல்லது தாக்குதல் சம்பவத்தில் தனது கணவரை இழந்து விடுகிறார். அதன்பின் அந்த இளம் விதவை  அதுபோன்ற சூழலை எவ்வாறு எதிர்கொள்ள முடியும், ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு குழந்தை இருந்தால், அந்த பெண்ணின் நிலை என்ன ஆகும்.

ஆதலால், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கருத்து பெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்குத் தண்டனை கொடுப்பது சரியாக இருக்கும்.

ஆனால், அந்த இளம் விதவைக்கு அந்த நீதி வழங்குவதில் அது அத்தியாவசியமான தீர்வாக இருக்காது. ஆனால், குற்றவாளிக்கு ஒருவேளை ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் தண்டனை வழங்கும் பட்சத்தில் அது பாதிக்கப்பட்ட விதவைக்குத் தீர்வாக இருக்கும்.

இன்றைய சூழலில், ஒரு குற்றத்தில் குற்றவாளிகளின் உரிமைகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படும் அளவுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்தும், அவர்களின் உரிமையும் பார்க்கப்பட வேண்டும். இருதரப்புக்கும் சமநிலையான பார்வை இருப்பது அவசியம், இருவரையும் மனிதநேயத்தோடு அணுக வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி லோக்கூர் தீர்ப்பில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x