Published : 07 Oct 2018 01:50 AM
Last Updated : 07 Oct 2018 01:50 AM
கர்நாடக அரசு அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 5.27 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெங்களூரு மாநகர வளர்ச்சித் துறையில் பொறியாளராக பணியாற்றும் கவுடையா மற்றும் கர்நாடக தொழில் வளர்ச்சி துறை தலைமை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. கடந்த 2 நாட்களில் கவுடையாவுக்கு சொந்தமான 2 வீடுகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ரூ. 75 லட்சம் ரொக்கப் பணம், 3 கிலோ தங்க கட்டிகள், 4.5 கிலோ தங்க ஆபரணங்கள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 வீடுகள், 8 மனைகள், 14 அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கியில் ரூ. 30 லட்சம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் சிக்கின.
இதேபோல டி.ஆர்.சுவாமியின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் ரொக்கப் பணம், 10 மனைகளுக்கான ஆவணங்கள், 1.6 கிலோ தங்கம், 5 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரின் வீடுகளிலும் ரூ.5.27 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT