Published : 05 Oct 2018 05:11 PM
Last Updated : 05 Oct 2018 05:11 PM
பெட்ரோல், டீசல் விலை உயர்வின்போது தினந்தோறும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து பிடுங்கிவிட்டு, மத்திய அரசு மிகவும் தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவிக்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.59-ம், டீசல் விலை ரூ.6.37-ம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ரூ.1.50-ஐ மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது:
''மத்திய அரசு விலைக் குறைப்பை மிகவும் தாமதமாக அறிவித்திருக்கிறது. தினந்தோறும் ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலையால் நாட்டின் கஜானாவில் ரூ.1 லட்சம் கோடி சேர்ந்திருக்கிறது. இது மக்களிடமிருந்து மத்திய அரசு பிடுங்கிய பணம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT