Published : 05 Oct 2018 11:30 AM
Last Updated : 05 Oct 2018 11:30 AM
கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து தற்போதுதான் கேரளா மீண்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்து ஓமன் கடல் பகுதியை நோக்கி நகரும் என தெரிகிறது.
இதன் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்கு 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ந்தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெய்யாறு, அருவிக்கரை, பம்பா, சோலையார், போத்துண்டி உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த ஆறுகள் செல்லும் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இடுக்கி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கேரள வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் கூறுகையில் ‘‘கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டு மாவட்டங்களில் 210 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT