Last Updated : 04 Oct, 2018 09:42 AM

 

Published : 04 Oct 2018 09:42 AM
Last Updated : 04 Oct 2018 09:42 AM

மஜத எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி; கர்நாடக அமைச்சரவையில் இடம்பிடிக்க கடும் போட்டி: முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி

கர்நாடகா அமைச்சரவையில் காலியாக உள்ள 7 இடங்களைப் பிடிக்க காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மஜத எம்எல்ஏக்கள் சிலர், அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் குமாரசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகி உள்ளார். அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு, வாரியத் தலைவர் பதவி பங்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினர் இடையே தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இத‌னிடையே, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சித்து வருவதாலும் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

7 இடங்கள் காலி

இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கும் நோக்கில், முதல்வர் குமாரசாமி அமைச்சரவையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப முடிவு செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் - மஜத மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், 7 இடங்களில் 6 இடங்கள் காங்கிரஸுக்கும், ஒரு இடம் மஜதவுக்கும் என பிரித்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

25 எம்எல்ஏக்கள் போட்டி

காங்கிரஸூக்கு வழங்கப் பட்டுள்ள 6 அமைச்சர் பதவி களைக் கைப்பற்ற 25 எம்எல்ஏக் கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் கள் சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர் கள் பலரும் அமைச்சர் பதவி கேட்பதால் காங்கிரஸ் மேலிடத் துக்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.

மஜதவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு மஜத எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது. தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்காவிட்டால், குமாரசாமி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, அமைச்சரவையில் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோரிடம் முதல்வர் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, மஜதவைச் சேர்ந்த சங்கர், விஸ்வநாத், மஞ்சு நாத் ஆகியோர் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இதனால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதால், மஜத எம்எல்ஏக்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என முதல்வர் குமார சாமி உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சில அமைச் சர்களின் துறைகளை மாற்றவும், சிலரை பதவியில் இருந்து நீக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x