Published : 25 Sep 2018 11:30 AM
Last Updated : 25 Sep 2018 11:30 AM
எப்போதெல்லாம் நான் பொதுத்துறை வங்கிக் கடன்களை அடைக்க முயற்சிக்கிறேனோ அப்போதெல்லாம் அமலாக்கத்துறை அதைத் தடுத்துவிடுகிறது என்று லண்டனுக்குத் தப்பியோடிய இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார்.
அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவும், சிபிஐ நீதிமன்றமும் தனித்தனியாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளன.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையாவின் ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
இதனிடையே நாட்டுக்குத் திரும்பி வரமறுக்கும் அவரை 'தலை மறைவு பொருளாதார குற்றவாளி' என்று அறிவிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டது. இதுகுறித்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்குப் மல்லையா சார்பாக அவரின் வழக்கறிஞர் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ''கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பொதுத்துறை வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் அதற்கான வேலைகளை ஆயத்தப்படுத்த முயலாத அமலாக்கத்துறை, என்னுடைய முயற்சிகளைத் தடுத்து வருகிறது'' என்று தெரிவித்தார்.
தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிப்பதற்கு மறுப்பு தெரிவித்த மல்லையா, தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இந்தியா வருவதற்குத் தான் ஒருபோதும் மறுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரிட்டன் நீதிமன்றத்தில் இதுகுறித்த தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றம் அடுத்த விசாரணை செப்.28-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT