Published : 22 Sep 2018 10:45 AM
Last Updated : 22 Sep 2018 10:45 AM
ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தலையிட்டு அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது, அம்பலப்படுத்திய பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவுக்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
“மூடிய கதவுகளுக்கு பின்னால் இருந்து பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. உண்மையை வெளியிட்ட ஹாலண்டேவுக்கு நன்றி. திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பல லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் கிடைக்கச் செய்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார். அவர் நமது வீரர்களின் புனிதமான ரத்தத்தை அவமதித்து விட்டார்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT