Published : 22 Sep 2018 10:19 AM
Last Updated : 22 Sep 2018 10:19 AM

ரபேல் பேரம்; அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா பரிந்துரைத்தது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்தால் புதிய சர்ச்சை

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்திருப்பதாகவும் அக்கட்சி கூறி வருகிறது. ஆனால் இந்த ஊழல் புகாரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.

அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஹாலண்டேயின் பேட்டி மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x