Published : 21 Sep 2018 11:41 AM
Last Updated : 21 Sep 2018 11:41 AM

உணவு பரிமாறுவதில் தாமதம்: தாயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மகன்

உணவு பரிமாறுவதில் தாமதம் செய்ததாக கோபம் அடைந்த மகன், தனது தாயை கிரிக்கெட் பேட்டினால் அடித்துக்கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் நேற்று நடந்துள்ளது. இதில் அவரது தங்கையும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சாரா ஹில்ஸ் அருகே நந்தி நகரில் திங்கள் அன்று இச்சம்பவம் நடைந்திருந்தாலும், பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என். சாக்குபாய் (55) நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்த பிறகுதான் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில்,‘‘என். கோபி எனும் இளைஞர் திங்கள் அன்று இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார். தன் மகனுக்கு உணவு பரிமாறிய சாக்குபாய், மேலும் சில வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டார்.

இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டுமென கேட்டு உறங்கிக் கொண்டிருந்த கோபி மீண்டும் தனது தாயை எழுப்பினார். அப்போது தங்கை ராணி வந்து சாதம் எடுத்து கோபிக்கு பரிமாறியுள்ளார். மூன்றாவது முறை சாதம் வேண்டுமென கோபி கேட்டபோது, சமையலறையில் போய் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி ராணி கூறியிருக்கிறார்.

இதனால் மிகவும் கோபம் அடைந்த கோபி, தன் தங்கையை கிரிக்கெட் பேட்டினால் ஓங்கி அடித்துள்ளார். வலி தாங்காமல் அலறிய ராணியின் குரல் கேட்டு உறக்கம் கலைந்த சாக்குபோய், வேகமாக குறுக்கிட்டு கோபியை தடுத்துள்ளார்.

அப்போது கோபி தனது தாயின் தலையிலும் பேட்டினால் ஓங்கி அடிக்கவே, பலத்த காயம் ஆளான  சாக்குபாய் துடிதுடித்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தாயையும் மகளையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்தன.

மருத்துவமனையில் உயிரிழப்பு

தொடர்ந்து உயிருக்குக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  சாக்குபாய், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு கோபி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்தபோது கோபியின் மனைவி ஜெயந்தி அங்கு வந்திருந்ததாகவும் பின்னர் அவர் உடனடியாக தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது’’ என போலீஸார் தெரிவித்தனர்.

உணவு பரிமாற தாமதம் செய்ததால் கிரிக்கெட் பேட்டை பயன்படுத்தி தாய் தங்கை இருவரையும் இளைஞர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தியதால் தாய் உயிரிழந்த இச்சம்பவம் பஞ்சாரா மலைப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x