Published : 20 Sep 2018 03:28 PM
Last Updated : 20 Sep 2018 03:28 PM

பொய் சொல்லாதீங்க ரபேல் மினிஸ்டர்’ - நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

ரபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகளை மறைக்க ரபேல் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயலுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரான்ஸின் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்திருப்பதாகவும் அக்கட்சி கூறி வருகிறது. ஆனால் இந்த ஊழல் புகாரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக தலைவர்களும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் இந்த விவகாரம் குறித்து சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள ரபேல் அமைச்சர் தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னாள் எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்ஏஎல் நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளார். இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது. அவர் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x