Published : 18 Sep 2018 07:08 PM
Last Updated : 18 Sep 2018 07:08 PM
டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு வென்ற அங்கிவ் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.
இந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே முக்கிய போட்டி நிலவியது.
பொதுத்தேர்தல்களில் நடத்தப்படுவது போலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார்.
மேலும் ஏபிவிபியின் சார்பில், துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். செயலாளர் பதவியை, என்எஸ்யுஐயை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கைப்பற்றினார். தேர்தலை எதிர்த்து காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் டெல்லி உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கிவ் போலியான சான்றிதழை கொடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து என்எஸ்யுஐ நிர்வாகிகள் கூறுகையில் ‘‘அங்கிவ் தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட பட்டச் சான்றிதல் போலியானது.
அவரது சான்றிதழ் எண்ணை வைத்து விசாரித்ததில் போலியானது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என கூறியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஏபிவிபி மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT