Published : 18 Sep 2018 05:54 PM
Last Updated : 18 Sep 2018 05:54 PM

பள்ளி வளாகத்திலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவர்கள்: கருவை கலைக்க மாத்திரை கொடுத்த பள்ளி நிர்வாகம்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹாஸ்டலில் தங்கிப்படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை மறைப்பதற்காக மாணவிக்கு மாத்திரைக் கொடுத்து கருவை கலைக்க முயன்ற பள்ளி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஹாஸ்டலில் மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு தங்கி, 10-ம் வகுப்பு படித்து வரும் 16- வயது மாணவி ஒருவர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்காக முந்தைய நாள் தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் பயிலும் சீனியர் மாணவர்கள் 4 பேர் மாணவியை அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் அவரை ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மாணவி கரப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் கர்ப்பத்தை கலைக்க, பள்ளி நிர்வாகி, விடுதி பாதுகாப்பாளர் உள்ளிட்டோர் முயன்றுள்ளனர். இதற்காக கட்டாயப்படுத்தி மாணவிக்கு மாத்திரைகள் கொடுத்துள்ளனர்.

நடந்த சம்பவங்கள் குறித்து சில தினங்களுக்கு முன்பு மாணவி பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி ஹாஸ்டலுக்கு வந்த பெற்றோர், மாணவியை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகி அவரது மனைவி, விடுதி வார்டன், காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த 4 மாணவர்களும் 17 வயது கொண்டவர்கள். எனவே அவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x