Last Updated : 16 Sep, 2018 08:47 PM

 

Published : 16 Sep 2018 08:47 PM
Last Updated : 16 Sep 2018 08:47 PM

‘டி20 பார்முலா’ தயார்: 2019 தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பாஜக

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் டி20 பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைப் பறித்து தாங்கள் அரியணை ஏற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக பாஜக பிரச்சாரம் செய்தது. அதில் குறிப்பாக மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரச்சாரம் முக்கியமானவை.

ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மோடியின் பிரச்சாரத்தை பார்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் வசதிகள் செய்யப்பட்டன. பாஜகவினர் மக்களுக்குத் தேநீர் அளித்து, மோடியின் பேச்சை கேட்கும் வகையில் பிரச்சார யுத்தியைக் கையாண்டனர். இந்த வித்தியாசமான பிரச்சார யுத்தியாலும், காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாகவும், பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் முக்கியமான படிதான் "டி20 பார்முலா" ஆகும்.

டி20 கிரிக்கெட் மக்களிடத்தில் எளிதாகச் சென்றடைந்தது போல் இந்த டி20 பார்முலா மூலம் மக்களை எளிதாக பாஜக அடையச் செய்யும் திட்டம்.

வரும் மக்களவைத் தேர்திலில் இந்த டி20 பார்முலா வெற்றிக்கான முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அது இப்போது வெளியாகி உள்ளது.

இந்த டி20 கிரிக்கெட் பார்முலாவின்படி, ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கின்படி ஒரு தொண்டர் குறைந்தபட்சம் தங்கள் பகுதியில் உள்ள 20 வீடுகளுக்குச் சென்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். அப்போது கேட்கும் மக்களுக்கு ஒரு கோப்பை தேநீர் அளித்து அவர்களுடன் உரையாட வேண்டும் என்பதுதான் டி20 திட்டமாகும்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மோடி அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தொண்டர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த டி20 பார்முலா தவிர்த்து, ஒவ்வொரு பூத்திலும் 10 இளைஞர்கள்(ஹர் பூத் தஸ் யூத்) என்ற திட்டமும், நமோ ஆப்ஸ் செயல்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்கள், பூத் அளவில் பணியாற்றும் தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாஜக அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், "பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, குறைந்த பட்சம் 20 வீடுகளில் உள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேநீர் அளித்து, மத்திய பாஜக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். இதன் மூலம் மக்களைச் சந்தித்து நேரடியாக உரையாடும் வாய்ப்பும், மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை அறியவும் முடியும்

இது தவிர்த்து மோடி அரசின் நமோ ஆப்ஸ் மூலமும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரச்சாரத்துக்காகவே தனியாக ஆப்ஸ்(செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த ஆப்ஸ் பாஜக தொண்டர்களுக்கானது. அவர்கள் செய்ய வேண்டிய பணி, இலக்குகள் குறித்து அதில் தொகுதிவாரியாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், தொண்டர்களுக்கான பணி, வாக்காளர்களை அதிகமாகச் சேர்ப்பது எப்படி, மக்களுக்கு அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இந்த ஆப்ஸில் இருக்கும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 100 வாக்காளர்களை நமோஆப்ஸில் சேர்க்க பாஜக திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இதற்காக ஒவ்வொரு பூத்திலும் ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு மோடி அரசின் நேரடி மானியத் திட்டங்கள், பாஜக ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளின் திட்டங்களை எடுத்துக்கூறும். சமூகத்தில் அனைத்துத் தரப்பினரையும் சேர்த்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பூத்திலும் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வதற்காக தனியாக 24 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்படும். இந்தக் குழு மோடி அரசின் 5 ஆண்டு சாதனைகள், திட்டங்கள், அடுத்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்கள் செய்ய இருக்கிறது ஆகியவற்றை உண்மையான புள்ளிவிவரங்களுடன், படங்களுடன், வீடியோக்களுடன் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அந்த பாஜக தலைவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x