Published : 14 Sep 2018 07:08 PM
Last Updated : 14 Sep 2018 07:08 PM
பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி பசுப் பாதுகாவலர்கள் சிலர் ஹவுரா ரயிலைப் போகவிடாமல் நான்கு மணிநேரம் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒடிசா மாநிலம் பாலோசோர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது.
நேற்று இரவு கல்கத்தா நோக்கி பாண்டிச்சேரி-ஹவுரா ரயில் சென்றுகொண்டிருந்தது, இதில் 17 பசுக்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதைப் பார்த்த கோ சுராக்சியா சமிதி அமைப்பைச் சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள் திரண்டு வந்தனர்.
பாலாசோர் ரயில்நிலையத்தில் சிறிதுநேரம் நின்றுவிட்டு உடனே புறப்படத் தயாராக இருந்த ரயிலை இவர்கள் தண்டவாளத்தில் நின்று கொண்டு தடுத்து நிறுத்தினர். பசுக்களை கீழே இறக்குங்கள் என கோஷமிட்டனர்.
உண்மையில் உரிய ஆவணங்களுடந்தான் பசுக்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஆனால் அதைப்பற்றிய விவரம் அறியாமல் கோ சுராக்சியா சமிதி அமைப்பின் பசுப் பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பசுப் பாதுகாவலர்களின் போராட்டம் நேற்று இரவு 8.12 லிருந்து இன்று அதிகாலை 12.35 வரை நீடித்ததால் ரயில் அங்கே தனித்து நின்றது.
போராட்டம் ஓய்ந்த பிறகு பாலாசோர் ரயில்வே மேலாளரும், காவல் உயரதிகாரிகளும் கையில் வைத்திருந்த உரிய ஆவணங்களைக் காட்டி உண்மையை விளக்கினர்.
அவற்றை வாங்கிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பிறகு பசுப் பாதுகாவலர்கள் பின்னர் ரயில் செல்ல அனுமதித்தனர். ''ஆரம்பத்திலேயே ஆவணங்களைக் காட்டுங்கள் என்று கேட்டிருந்தால் ரயில் தேவையின்றி தாமதப்பட்டிருக்க வேண்டியதில்லை. உண்மை விவரங்களைக் கூற வந்தவர்களையும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவர்களது கண்மூடித்தனமான போராட்டத்தினால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் ரயில் தடுத்துநிறுத்தப்பட்டது'' என்றார் ஒரு காவல் உயரதிகாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT