Published : 14 Sep 2018 02:49 PM
Last Updated : 14 Sep 2018 02:49 PM

வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

வரதட்சணை புகாருக்கு உள்ளாகும் நபர்களை உடனடியாக கைது செய்ய எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. கணவனையும், கணவர் குடும்பத்தினரையும் பழிவாங்க இந்த சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டது. இதையடுத்து, வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, வரதட்சணை தொடர்பான வழக்கில் யாரையும் உடனே கைது செய்யக்கூடாது, குடும்ப நல அமைப்புகளை உருவாக்கி இரு தரப்பினரிடமும் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், விசாரணைக்கு பிறகே யாரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, ‘‘முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. வரதட்சணை புகார்கள் குறித்து விசாரிக்க மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இது, நாடாளுமன்றத்தில் பணி. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் இருந்தால் அதனை சரி செய்து சட்ட திருத்தம் செய்ய வேண்டியது நாடாளுமன்றமே. எனவே, வரதட்சணை புகார் தொடர்பான வழக்கில் முந்தைய உத்தரவே பொருந்தம்.  இந்த வழக்குகளில் போலீஸாரின் அதிகாரரம் உறுதிபடுத்தப்படுகிறது. அவர்கள் தேவையென்றால் உடனடியாக கைது செய்ய எந்த தடையும் இல்லை. புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் 498(ஏ) பிரிவு தவறாக பயன் படுத்தப்படுகிறது. எனவே இதன் கீழ் கைது செய்யப் படுவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து அந்தந்த நீதிமன்றங்கள் முடிவு செய்யும்’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x