Published : 14 Sep 2018 02:37 PM
Last Updated : 14 Sep 2018 02:37 PM

5 நாட்களாகச் சாப்பிடவில்லை- பிஸ்கட், ஆப்பிள்களை எடுத்துச் சென்ற தீவிரவாதிகள்: காஷ்மீரில் விநோதம்

இந்திய ராணுவத்தின் தேடுதலால் ஐந்து நாட்களாகச் சாப்பிடவில்லை என்று கூறி காஷ்மீரில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பிஸ்கட், ஆப்பிள்களை எடுத்துச் சென்றனர்.

இந்த விநோதமான சம்பவம் காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, புதன்கிழமை அன்று ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஜவான் மற்றும் வனத்துறை காவலர் மீது, தீவிரவாதிகள் மூவர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தேடி வந்தனர். இரண்டாம் நாளான நேற்று (வியாழக்கிழமை) ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கக்ரியால் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-மொகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதில் டிஎஸ்பி ஒருவர் உட்பட பாதுகாப்புப் படையினர் 12 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நக்ரோட்டா-ஜாஜர் பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர், தாக்குதலுக்கு முன்னதாக தன்னுடைய வீட்டுக்கு தீவிரவாதிகள் வந்தது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ''புதன்கிழமை அன்று சுமார் 8 மணிவாக்கில், 3 தீவிரவாதிகள் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். அவர்களைக் குறித்து யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்று பயமுறுத்தினர். தாங்கள் 5 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி, எங்களிடம் இருந்த பிஸ்கட், ஆப்பிள்களை எடுத்துக் கொண்டனர்.

கிழிந்த ஆடைகளை உடுத்தியிருந்த அவர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தனர். எங்களின் ஆடைகளையும் எடுத்துக்கொண்டனர். கார் வேண்டும் என்று கேட்டனர். இல்லை என்று கூறியதும் கிளம்பிவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x