Published : 14 Sep 2018 11:52 AM
Last Updated : 14 Sep 2018 11:52 AM
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் 15 பேருக்கு எதிராக 2010-ம் ஆண்டு வழக்கில் மகாராஷ்டிர நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. கோதாவரி ஆற்றின் மீது கட்டப்படும் பாப்ளி அணை விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருமாநில எல்லையில் கோதாவரியின் குறுக்கே மகாராஷ்டிரா அரசு பாப்ளி அணை கட்டி வருகிறது. 2010-ம் ஆண்டு இந்த அணையைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவாளர்களுடன் அணையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட அவரது ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் மகாராஷ்டிர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தர்மாபாத் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் 2010-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிட்டுள்ள தர்மாபாத் நீதிமன்ற நீதிபதி என்.ஆர்.கஜ்பியே, சந்திரபாபு உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து, செப்டம்பர் 21-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு குறித்துப் பதிலளித்த சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான லோகேஷ், "என்னுடைய தந்தையும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். தெலங்கானா மக்களின் உரிமையைப் பாதுகாக்க அப்பா போராடினார். அதற்கு எதிராக அவர் கைது செய்யப்பட்ட போதிலும் ஜாமீன் பெற மறுத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT