Published : 11 Sep 2018 11:30 AM
Last Updated : 11 Sep 2018 11:30 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு: தீவிரவாதிகளை விடுதலை செய்ய பாஜக தூண்டுதல் என விமர்சனம்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகளை விடுதலை செய்யும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.

2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும் மூத்த தலைவருமான ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு தனிச்சையானது அல்ல. இந்த விஷயத்தில் தமிழக அரசை இயக்குவது மத்திய பாஜக அரசு தான்.

தீவிரவாதிகள் விஷயத்தில் பாஜக மென்மையான போக்கை கடை பிடிக்கிறது. மத்திய அரசும், தமிழக அரசும் இதை வைத்து அரசியல் செய்கின்றன. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மீது விரோதம் ஏதும் இல்லை, அவர்களை மன்னித்து விட்டோம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கலாம்.

ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் மட்டுமே நாங்கள் இந்த விஷயத்தை அணுக முடியும். ஒரு மாநில அரசின் பொறுப்பு தீவிரவாதிகளை பாதுகாப்பதா அல்லது தண்டிப்பதா என்ற கேள்வியை முன் வைக்கிறோம். கூட்டணிக்கட்சியாக இல்லாவிட்டாலும், தமிழகத்தில் தனது கூட்டாளியாக இருக்கும் அதிமுக அரசை வைத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

தீவிரவாதிகள் விஷயத்தில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. இவர்களின் கபட நாடகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்’’ என ரண்தீ்ப் சுர்ஜேவாலா கூறினார்.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க ரண்தீ்ப் சுர்ஜேவாலா மறுத்து விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x