Published : 10 Sep 2018 05:43 PM
Last Updated : 10 Sep 2018 05:43 PM

ராஜஸ்தானைத் தொடர்ந்து ஆந்திராவும் பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்தது

 

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம்  88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம்  77 ரூபாயையும் கடந்து சென்றுள்ளது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டீசல் விலை உயர்ந்துவிட்டதால் காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், மக்களின் சிரமங்களை அறிந்த ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும எதிர்க்கட்சிகள் சார்பில் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்த பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலைக் குறைப்பு நாளை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும். இந்த விலைக் குறைப்பால் அரசுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x