Published : 10 Sep 2018 05:25 PM
Last Updated : 10 Sep 2018 05:25 PM

வாட்ஸ்அப் பார்க்க நேரத்தை செலவிட்ட மணமகள் -திருமணத்தை நிறுத்திய மணமகன்

உத்தரப் பிரதேசத்தில் மணப்பெண் பெரும்பாலான நேரத்தை வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் செலவிடுவதாக புகார் கூறி கடைசி நேரத்தில் மணமகன் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமரோஹா பகுதியைச் சேர்ந்த குவாமர் ஹைதருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் திடீரென மணமகன் ஹைதர், திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்துபோன மணமகள் வீட்டார், உடனடியாக மணமகன் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது, மணமகளை தான் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, பெரும்பாலான நேரங்களில் அவர் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டு இருப்பதாக மணமகன் கூறியுள்ளார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்ஸ்அப் வழியாக அனுப்பும் தகவல்களை தெரிந்து கொள்வதிலும், அதற்கு பதில் அனுப்புவதிலுமே மணமகள் ஆர்வமாக இருந்ததாகவும், தனது மொபைல் போன் அழைப்புக்கு அவர் பதிலளிக்கவில்லை என மணமகன் கூறியுள்ளார். இதனால் திருமணம் நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் மணமகன் திடீரென 65 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்பதாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் மணமகளின் தந்தை உள்ளூர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மணமகளின் தந்தை ஊரஜ் மெகந்தி கூறுகையில் ‘‘எனது மகள் எப்போதும் வாட்ஸ்அப் பார்ப்பதில் பொழுது போக்குவதாக கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். வாட்ஸ்அப் பார்க்கும் அவரது செயல் தனக்கு பிடிக்கவில்லை என மணமகன் கூறியுள்ளார். ஆனால் திருமணத்தை நிறுத்துவதற்கு இது காரணமல்ல.

அவர் எங்களிடம் இருந்து 65 லட்சம் ரூபாய் வரதட்சணை எதிர்பார்க்கிறார். இதனை தராததால் திருமணத்தை நிறுத்தியுள்ளார். போலீஸில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து எனது மகளின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x