Published : 10 Sep 2018 03:53 PM
Last Updated : 10 Sep 2018 03:53 PM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உயர்ந்து வருகிறது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எங்கள் கைகளில் இல்லை, இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு 23 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் போராட்டம் நடந்தது.
இதுபோலவே, கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே எதிர்கட்சிகள் நடத்தி வரும் பந்த் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தி வரும் முழு அடைப்புப் பேராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியை, உற்பத்தி செய்யும் நாடுகள் குறைத்து விட்டன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
இதற்கு நாங்கள் எதும் செய்ய முடியாது. விலையை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை. இந்த பிரச்சினையை அரசியலாக்க காங்கிரஸ் முயலுகிறது. ஆனால் மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT