Published : 10 Sep 2018 03:02 PM
Last Updated : 10 Sep 2018 03:02 PM

பெட்ரோல் பங்க்கை சூறையாடிய காங்கிரஸ் தொண்டர்கள்: பந்த் போராட்டத்தில் வன்முறை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கினர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல மாநிலங்களிலும் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. எனினும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். பிஹாரில் வாகனங்கள் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைந்தன.

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றுக்குள் நுழைந்தனர். பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x