Published : 02 Sep 2018 12:21 AM
Last Updated : 02 Sep 2018 12:21 AM

தெலங்கானாவுக்கு முன்கூட்டியே தேர்தல்: முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பு?

தெலங்கானா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த  2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆனால், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கும் சேர்த்து 5 மாநிலங்களில்  தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரங்காரெட்டி மாவட்டத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பிரம்மாண்டமான மைதானத்தில், ‘பிரகதி நிவேதன சபை’ எனும் பெயரில் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் மாபெரும் பொதுக்கூட்டத்தை இன்று மாலை நடத்த உள்ளது.

இதில் கடந்த 4 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இன்று காலை தெலங்கானா அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவையை கலைக்கும் முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மின் வாரியம், போக்குவரத்து, போலீஸ் துறை, மகளிர், சிறுபான்மையினருக்கு பல திட்டங்களை அறிவித்தார். இதனால், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தெலங்கானா மாநிலத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாம் என கே. சந்திர சேகர ராவ் திட்டமிட்டுள்ளார் என அக்கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x