Published : 01 Sep 2018 11:05 AM
Last Updated : 01 Sep 2018 11:05 AM

தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு: வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி

தமிழகம் முழுவதும் 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வால் வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. நாட்டிலேயே சுங்க கட்டணம் வசூலில் முன்னணியில் இருக்கும்  மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி கார்களுக்கு 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும், பேருந்துகள், லாரிகளுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும். இந்த கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடாலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை-தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு வாகன உபயோகிப்பாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு சுங்கச் சாவடிகளில் கி.மீ.க்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 1.08 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x