Published : 24 Aug 2018 09:26 AM
Last Updated : 24 Aug 2018 09:26 AM
‘‘ஜெர்மனியில் பேசும் போது பொய் தகவல்களைக் கூறியதன் மூலம், இந்தியாவை ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள, ‘பசிரியஸ் சம்மர் ஸ்கூல்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்னர் பங்கேற்றார். அங்கு அவர் பேசும்போது, ‘‘ஒரு நாட்டின் வளர்ச்சியில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அைளிக்கப்பட வேண்டும். ஆனால் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு, மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வேலை வாய்ப்பு உட்பட பல அம்சங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, உலகில் தீவிரவாத குழுக்கள் உருவாக காரணமாகி விடுகிறது’’ என்று கூறினார். அதற்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசும்போது, ‘‘இந்தியாவில் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு, பழங்குடியின மக்கள், தலித்துகள், சிறுபான்மையினத்தவர்களை வளர்ச்சிப் பணிகளில் இருந்து ஒதுக்கி வைக்கிறது. இது மிகப்பெரிய அபாயமாக இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று கூறியதாவது:
ஜெர்மனி பள்ளியில் ராகுல் காந்தி பேசும்போது இந்தியாவை சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார். இந்தியா மீது மோசமான கருத்து ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவரது பேச்சு தீவிரவாதத்தை ஆதரிப்பது போல் உள்ளது. மேலும், சிறுபான்மையினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காவிட்டால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினத்தவர்கள் ஐஎஸ் தீவிரவாதத்துக்கு விலை போய்விடுவார்கள் என்பது போல் ராகுல் காந்தியின்
பேச்சு அமைந்துள்ளது. இதன்மூலம் சிறுபான்மையினத்தவர்களை ராகுல் காந்தி இழிவுப்படுத்தி இருக்கிறார். இந்தியா மீது மோசமான கருத்தை வைத்திருக்கிறார் ராகுல்.
மோடி ஆட்சியில் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியாவும் உள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்க பொய்யானது. ராகுல் காந்திக்கு எந்த புள்ளிவிவரமும் இல்லை. உரை நிகழ்த்துவதற்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வதும் இல்லை.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 19 ஆண்டுகள் இருந்தார். பத்து ஆண்டுகள் மறைமுக பிரதமராக இருந்து இந்தியாவை ஆட்சி செய்தார். இதுதான் காங்கிரஸ் கலாசாரம் இல்லையா? ஜெர்மனியில் பேசி
யது குறித்து ராகுலும் சோனியாவும் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தியாவை மோசமாக சித்தரித்ததற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது உணவு உரிமை சட்டம் 11 மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் யூனியன் பிரதேசங்கள் உட்பட 36 மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சம்பிட் பத்ரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT