Published : 20 Aug 2018 06:17 PM
Last Updated : 20 Aug 2018 06:17 PM
மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ கட்கில் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கை விவரங்களை ஆர்டிஐ தகவலுரிமையின்படி அளிக்க தொடக்கத்தில் ஒருமுறை முந்தைய மத்திய அரசு மறுத்ததாக முன்னாள் தகவல் ஆணையர் தெரிவித்தார்.
அதாவது அப்போதைய மத்திய அரசு குறிப்பிட்ட மாநிலங்களின் பொருளாதார நலன்களைக் காரணம் காட்டி ஆர்டிஐ-யின் கீழ் தகவல்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் அமைத்த மேற்குத் தொடர்ச்சி மலை சூழலிய நிபுணர் குழுவிற்கு கட்கில் தலைமை வகித்தார். இதன் 2011 அறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளை சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இத்தனை நாட்களாக இப்படியொரு குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை என்ன கூறுகிறது என்பது பொதுவெளியில் அவ்வளவாகத் தெரியவரவில்லை. ஆனால் இப்போது கேரளாவை பேய் மழை வெள்ளம் புரட்டிப் போட்டதையடுத்து சுமார் ஏழரை லட்சம் மக்கள் அங்கு உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய தகவல் முன்னாள் ஆணையர் ஷைலேஷ் காந்தி கூறும்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திடம் ஏப்ரல் 9, 2012இல் அளித்த உத்தரவின்படி கட்கில் அறிக்கையை பொதுவெளிக்குத் தெரியப்படுத்துமாறு கோரியதாகத் தெரிவித்தார்.
2012-ல் தகவலுரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் 2ம் முறையாக மனு செய்ததையடுத்து ஷைலேஷ் காந்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் இத்தகைய அறிக்கைகள் அனைத்தையும் அரசு பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.
கேரளா, எர்ணாக்குளத்தைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணம் என்பவர் செப்டம்பர் 2011இல் கட்கில் அறிக்கை குறித்த தகவலைக் கேட்டு ஆர்டிஐ மனு செய்திருந்தார். ஆனால் அப்போது பொதுத் தகவல் அதிகாரி இந்த மனுவை நிராகரித்தார்.
எந்தச் சூழல்களின் கிழ் ஆர்டிஐ தகவல் கோரப்பட்டதோ அந்த இரண்டு பிரிவுகளின் கீழும் தகவலை அளிக்க வேண்டிய அவசியமில்லை, மறுக்கலாம்.
ஆனால் இதே கிருஷ்ணன் இரண்டாவது முறையாக மனு செய்தார், அப்போது சிஐசி ஷைலேஷ் காந்தி ஆர்டிஐ சட்டம் பிரிவு 4ன் கீழ் அறிக்கையின் சுருக்கத்தை அளிக்க உத்தரவிட்டார்.
காந்தியின் உத்தரவில், “நாட்டின் குடிமக்கள், மற்றும் குடிமைச் சமூகம் ஆகியோர் நாட்டில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகளின் பல்லுயிர்த் தன்மையை பாதுகாக்க செயல்பூர்வமாக உள்ளனர். ஆகவே அவர்களுக்கு நம் சுற்றுச்சூழல் அமைப்பின் உண்மையான சித்திரம் தெரிய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சிஐசி-யின் உத்தரவை அப்போதைய மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்பியது. அப்போது மே 17, 2012-ல் நீதிபதி விபின் சாங்கி ஆர்டிஐ மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
மத்திய அரசு இதனையடுத்து விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் இன்னொரு குழுவை அமைத்தது. இந்தக் குழு கட்கில் அறிக்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT