Last Updated : 20 Aug, 2018 02:08 PM

 

Published : 20 Aug 2018 02:08 PM
Last Updated : 20 Aug 2018 02:08 PM

கேரளாவில் மீண்டும் விமானப் போக்குவரத்து: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்து

கேரளாவின் கொச்சி சர்வதேச விமான தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பயணிகள் விமானப் போக்குவரத்து இன்று காலை மீண்டும் தொடங்கியது.

பெங்களூருவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த முதல் வர்த்தக விமானம் 'அலையன்ஸ் ஏர் விமானம்' ஐஎன்எஸ் கொச்சி கடற்படை விமான நிலையத்தில் திங்களன்று தரையிறங்கியது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு சமூக வலைதளத்தில், ஏர் இந்தியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

''கொச்சின் ஐஎன்எஸ் கருடா கடற்படைத் தளத்தில் (கொச்சி விமான நிலையத்திற்கான மாற்று தளம்) முதல் கட்ட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. @airindiain குழுவுக்கு வாழ்த்துகள்.

ஏர் இந்தியா விமானம் இன்று காலை ஐஎன்எஸ் கருணா கடற்படை விமான தளத்திலிருந்து 9.15 மணிக்கு பெங்களூருக்கு புறப்படுகிறது. இதன் வழித்தடத்தில் கோவை, மதுரை ஆகிய நகரங்களும் இடம்பெறும். விரைவில் மற்ற விமானங்களும் இந்த முயற்சியில் சேரக்கூடும். #KeralaFloodsக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன'' என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வர்த்தக விமான நடவடிக்கையை மீண்டும் தொடர்வதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள ஐஎன்எஸ் கருடாவின் தலைமை அதிகாரி கமாண்டர் ஆர்.ஆர்.ஐயர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ள விமான நிலையத்திற்கு இது ஒரு வரலாற்று நாள். அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மீண்டும் விமானம் செயல்பட உதவும் வகையிலும் மேலான ஒரு பணி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து விமானம் நிறுத்துமிடத்தை தெளிவாகப் பிரித்துவிட்டோம். அதனால் விமான போக்குவரத்து தொடங்க தடையற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x