Published : 18 Aug 2018 09:16 PM
Last Updated : 18 Aug 2018 09:16 PM
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிறார உணவு அளிக்கும் வகையில், சீக்கியர்களின் சர்வதேச கல்சா அமைப்பு களத்தில் இறங்கி உணவு சமைத்துஅளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாகப் பெய்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சம் மக்கள் சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவுதவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவுக் கரம் நீண்டு, நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏராளமான மக்கள் உணவுப்பொருட்கள், ஆடைகள், பால்பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களை அளித்து வருகின்றனர். முதல்வர் நிவாரண நிதிக்கும் பணத்தை அனுப்பி பலர் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் பல்வேறு முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் சீக்கியர்களின் மிகப்பெரிய கல்சா அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களின் சர்வதேச கல்சா உதவி மையத்தின் இந்தியக்கிளையைச் சேர்ந்தவர்கள் நேற்று கொச்சி நகர் வந்து சேர்ந்தனர். அவர்கள் கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்காக உணவு சமைத்து வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
சீக்கியர்களின் இலவச உணவு படைக்கும் லாங்கர் அடுப்பின் மூலம் உணவு சமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். கொச்சியில் உள்ள சிறி குரு சிங் சபாவுடன் இணைந்து, கல்சா சீச்கியர் அமைப்பு இந்தப் பணியை செய்து வருகின்றனர்.
கேரளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேடி வந்து உணவு சமைத்து உதவி வரும் சீக்கியர்களுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT