Published : 18 Aug 2018 12:57 PM
Last Updated : 18 Aug 2018 12:57 PM
பெருமழை, வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை தாமதிக்காமல் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அங்கு மழை தீவிரமடையத் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாநிலத்தில் 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 324 பேர் வெள்ளத்துக்கு பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காணவில்லை. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ.19 ஆயிரத்து 500 கோடி என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடியை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள வெள்ளம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள பிரதமர் மோடிக்கு, கேரள மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை தாமதமின்றி, தயவுசெய்து தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எந்தவிதமான நிலையற்ற தன்மையுடன் கேள்விக்குறியாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT