Published : 17 Aug 2018 11:47 AM
Last Updated : 17 Aug 2018 11:47 AM

கேரள மக்களுக்கு நிம்மதி கிடைக்குமா? : வரும் ஞாயிறு முதல் மழை குறையும் என்று வானிலை அறிக்கையில் தகவல்

வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 19) முதல் கேரளாவைப் புரட்டி எடுத்துவரும் பேய்மழை குறையும் என்று இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டு கேரள மக்களுக்கு துயரத்திலும் நிம்மதியூட்டியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் மழை கொட்டித் தீர்த்தது, இப்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் விதர்பா நோக்கி நகர்ந்து மத்தியப்பிரதேச தென்மேற்குப் பகுதி அதனை ஒட்டிய குஜராத், மகாராஷ்டிராவில் மையம் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் மேற்கு வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து மெதுவே பலவீனமடையும், இது 12 மணி நேரங்களில் நிகழும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் 19 முதல் கேரளாவில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.சந்தோஷ் தெரிவித்தார், ஆனாலும், “மேற்குக் காற்று 2 நாட்களுக்கு வலுவாகவே இருக்கும் ஆகவே அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைக்கான ரெட் அலர்ட்டாக அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழை, மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சனிக்கிழமை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோட் உச்சபட்ச எச்சரிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தின் பீருமேடுவில் வியாழனன்று 34.9 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் 7-11 செமீ கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் சில இடங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் 12-20 செமீ மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x