Published : 15 Aug 2018 06:42 PM
Last Updated : 15 Aug 2018 06:42 PM
இன்று டெல்லியின் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அங்கு வாழும் தமிழர்கள் பாரம்பரிய முறையில் கலந்து கொண்டனர். இது அந்நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். இதில், ஆயிரக்கணக்கானவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், டெல்லியின் தமிழ் பள்ளிகளின் தமிழர்கள் தமது பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்திருந்தனர்.
வெள்ளை வேட்டி சட்டையுடன் தோளில் துண்டுகளை தொங்கவிட்டபடி மாணவர்கள் இருந்தனர். மாணவிகள், பட்டுப்புடவைகளுடன் தலையில் மல்லிகை பூக்களுடன் காட்சி அளித்தனர். இவர்களில் பலர் தாவணி பாவாடை சட்டையும் அணிந்து வந்தனர். இதை விழாவிற்கு வந்த பார்வையாளர்கள் பார்த்து வியந்து பாராட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழர்களை பாரம்பரிய உடைகள் அணிந்து வருமாறு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை ஏற்ற தமிழக அரசின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இது ஒரு புதிய முயற்சியாக டெல்லியின் செங்கோட்டை விழாவில் இன்று செய்யப்பட்டது.
இதற்காக, பாரம்பரிய உடைகளில் பார்வையாளர்களாக டில்லி தமிழ் கல்விக் கழக (DTEA) பள்ளி மாணவர்கள் 28 மாணவியர் உட்பட 50 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு உணவு,போக்குவரத்து ,மற்றும் பிரத்தியோக அழைப்பிதழ் ஆகியன தமிழ்நாடு அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு இல்லத்தில் சுதந்திர தின விழா
இதனிடையில், டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும் முதன்மை உள்ளுரை ஆணையருமான ஜஸ்பீர்சிங் பஜாஜ் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT