Last Updated : 15 Aug, 2018 05:06 PM

 

Published : 15 Aug 2018 05:06 PM
Last Updated : 15 Aug 2018 05:06 PM

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் திடீர் ராஜினாமா: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்க மறுப்பு

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளார்.

கட்சித் தலைமையுடன் எந்தவிதமான தனிப்பட்ட காரணமும் இல்லை தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அசுதோஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனால், மூத்த தலைவர் அசுதோஷ் ராஜினாமாவுக்கு வேறு காரணங்கள் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, டெல்லியில் இருந்து மாநிலங்களவைக்குத் தொழிலதிபர் ஒருவரைத் தேர்வு செய்து அனுப்ப முடிவு செய்துள்ளதை அசுடோஷ் விரும்பவில்லை. மேலும், மற்ற உறுப்பினர்களுக்கு வழங்காமல் தொழிலதிபரைத் தேர்வு செய்ததால், கட்சியில் மற்ற உறுப்பினர்கள் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தச் செய்தியை ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் கோபால்ராய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், அசுதோஷ் எந்தவிதமான கோபத்திலும் இல்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முடிவுகள் எடுப்பதற்கு உரிமை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தனது முடிவு குறித்து மூத்த தலைவர் அசுதோஷ் ட்விட்டரில் பதிவிடுகையில், ஆம் ஆத்மி கட்சியுடன் நான் இருந்த காலம் அழகானது, புரட்சிகரமானது. என்னுடைய முடிவை ஊடகங்கள் மதிக்க வேண்டும், என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது. ஒவ்வொரு பயணத்துக்கும் முடிவு உண்டு. ஆம் ஆத்மி கட்சியுடன் நான் இருந்த காலம் என்பது மறக்க முடியாது. என் தனிப்பட்ட காரணங்களால் நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அசுதோஷ் முடிவை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுத்துவிட்டார். அவர் ட்விட்டரில் கூறுகையில், நான் எப்படி உங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியும். என் வாழ்நாளில் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளராக இருந்த அசுதோஷ் கேஜ்ரிவால் மீதிருந்த ஈர்ப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட அசுடோஷ் 3 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அரசியல் விவகார கமிட்டியில் உறுப்பினராகவும் அசுதோஷ் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x