Published : 11 Aug 2018 08:24 AM
Last Updated : 11 Aug 2018 08:24 AM
கர்நாடகாவில் கன மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணை களுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமா வதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பியது. கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத் துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1. 20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. எனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் வய நாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 124.48 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 47 ஆயிரத்து 709 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலை யில், அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரத்து 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 69 ஆயிரத்து 471 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரத்து 321 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைசூரு, மண்டியா காவிரி கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT