Published : 10 Aug 2018 08:54 PM
Last Updated : 10 Aug 2018 08:54 PM
மத்திய அரசு ரத்து செய்த ஹஜ் மானியத்தை மீண்டும் அளிக்க அதிமுக மக்களவையில் வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தகவலும் வெளியாகி உள்ளது.
இது குறித்து நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினரான பி.ஆர்.சுந்தரம் நேற்று மக்களவையில் பேசியதாவது: ஹஜ் யாத்திரிகர்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தொகை கடந்த ஜனவரி 16-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், தன் வாழ்க்கையில் ஒருமுறைக்காக புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எங்கள் அம்மாவின் ஆட்சிக் காலத்தில் ரூ.3 கோடி நிதி உதவியுடன் உலமாக்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்தி இருந்தார். தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ரத்து செய்யப்பட்ட ஹஜ் மானியத்தொகையை மீண்டும் மத்திய அரசு அளிக்க வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இத்துடன், தமிழக அரசு ஹஜ் யாத்திரீகர்களுக்காக இந்த வருடம் ரூ.8 கோடி மானியத் தொகை அறிவித்துள்ளது. எனவே, முன்பு போல் ஹஜ் மானியம் அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது ரத்து உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT