Published : 10 Aug 2018 02:16 PM
Last Updated : 10 Aug 2018 02:16 PM
மகாராஷ்டிராவில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன.
மும்பையை அடுத்த நள்ளசோபராவின் மேற்கு பகுதியில் உள்ள பண்டார் ஆலி பகுதியில் 'இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி' என்ற அமைப்பின் உறுப்பினர் வைபவ் ராவுத் கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் கடைகளில் தீவிரவாத தடுப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து அதிகஅளவில் வெடிகுண்டுகளை கைப்பற்றினர். சில புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிரவாத தடுப்புப் படையினர் ராவத்தை மும்பை அழைத்து வந்து காவலில் வைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ராவத்தின் மீதான இக்கைது நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்து ஜனஜாக்ருதி சமிதி, ''மாலேகான் பாகம் 2'' என்று தெரிவித்துள்ளது.
நாசிக் மாவட்டத்தில், மாலேகான் நகரில் கடந்த 2008 செப்டம்பர் 29 அன்று பிகு சவுக் பகுதியில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். மேலும் 101 பேர் காயமடைந்தனர். மாலேகான் சம்பவ வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வைபவ் ராவத் ஒரு பசுப் பாதுகாவலரும் ஆவார். பசுக்களை பாதுகாப்பு அமைப்பாக இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி செயல்பட்டு வருகிறது. இந்து ஜனஜாக்ருதி சமிதி மாநில அமைப்பாளர் சுனில் கான்வத் தெரிவிக்கையில், ''இந்து அமைப்புகளை இந்து ஜனஜாக்ருதி சமிதியின்கீழ் ஒன்றிணைப்பதற்கான நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். எனினும் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ராவத் கலந்துகொள்ளவில்லை.
சனாதன் சன்ஸ்தாவின் பல அப்பாவி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மாலேகான் வழக்கின் மூலம் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று பரவிக் கொண்டிருக்கும் இந்த செய்திகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, வைபவ் ரவுத் கைது சம்பவம் புனையப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இது மாலேகான் பாகம் 2 இன் ஒரு உதாரணம் ஆகும்," என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT