Published : 10 Aug 2018 12:59 PM
Last Updated : 10 Aug 2018 12:59 PM

மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணையப்போவதில்லை என்றும், தனித்து போட்டியிடப்போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் 105 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பறிகொடுத்தது. பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட எந்த அணியையும் சேராத கட்சிகளின் ஆதரவையும் பெற்று பாஜக கூட்டணி வேட்பாளர் 125 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளின் ஆதரவையும் பெற காங்கிரஸ் செய்த முயற்சி பலிக்கவில்லை.

முன்னதாக, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரினார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால் அரவிந்த் கேஜ்ரிவாலை தொலைபேசியில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஆதரவு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை விதித்தது. இதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார். மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி நடுநிலை வகித்தது.

இந்தநிலையில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஹரியாணா மாநிலம் ரோதக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘டெல்லியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. ஹரியாணா பாஜக அரசை விட டெல்லி அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும். எதிர்கட்சிகளின் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு எந்த பங்கும் இல்லை. எனவே தான் அந்த கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x