Last Updated : 09 Aug, 2018 11:50 AM

 

Published : 09 Aug 2018 11:50 AM
Last Updated : 09 Aug 2018 11:50 AM

துப்பாக்கியால் சுட்டு 18 வயதுப் பெண், காவல்அதிகாரி உயிரிழப்பு: பைக்கில் வந்த நபர்கள் நடுரோட்டில் அட்டூழியம்

18 வயதுப் பெண்ணையும், அவரை அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரியையும் பைக்கில் வந்த மூன்று பேர், சாலையில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஹரியாணாவில்  நடந்துள்ளது.

ரோதக் நீதிமன்றம் அருகே, பதினெட்டு வயதுப் பெண்ணுடன்,  அவருடன் பாதுகாப்புக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் நரேந்திர குமார் மற்றும் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஆகியோர் சென்றனர். தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் திருமணத்தின்போது அவருடைய பிறந்த வருடம் குறித்த விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது, மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், அந்த பெண் மற்றும் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர். இதில் பெண் கான்ஸ்டபிள் காயப்படாமல் தப்பித்துக்கொண்டார்.

இதுகுறித்து ரோடக் காவல் கண்காணிப்பாளர் ஜாஷன்தீப் சிங் ரந்தாவா தெரிவிக்கையில், ‘‘பெற்றோரை விருப்பத்தை மீறி பெண் வேறொருவரை திருணம் செய்துகொண்டதால் அவரது பெற்றோர் ஒரு வழக்கு தொடுத்திருந்தனர். அதனால் இப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இக் கொலைத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளங்கள் பற்றி பெண்ணின் மாமியார் துப்பு கொடுத்திருக்கிறார். உயிரிழந்த பெண் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். 17 வயதாகும்போது வீட்டைவிட்டுச் சென்று ஒரு இளைஞரை திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் இளைஞர் மீது புகார் பதிவு செய்தார்.

விசாரணையில், இருவரும் திருமணம் செய்துகொண்டபோது, அந்த பெண் ஒரு வயது வந்தவர் என்று நிரூபிக்க போலீசாரிடம் போலி ஆவணங்களைக் காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண் திருமணத்தின்போது திருமண வயதை அடையாதவர் என்ற உண்மையான சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.

இதன்பிறகு, தலித் இளைஞர் பொய்யான சான்றுகள் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை பெற்றோருடன் திரும்பிச்செல்லும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்பெண் அதை மறுத்துவிட்டார். அதனால் இவர் கர்ணாலில் உள்ள நாரி நிகேதன் எனும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். பொய்யான சான்றிதழ்கள் சமர்ப்பித்தது தொடரிபாக அவர் கைது செய்யப்படவில்லை’’ இவ்வாறு ரோடக் போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஜாஷன்தீப் சிங் ரந்தாவா தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திரும்பிச்செல்லும்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றது. விரைவில் பைக்கில் வந்துகொலைத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x