Last Updated : 06 Aug, 2018 07:42 PM

 

Published : 06 Aug 2018 07:42 PM
Last Updated : 06 Aug 2018 07:42 PM

ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

கடந்த 2-ம் தேதி மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஏற்கெனவே இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி திருத்தங்களுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் திருத்தங்களை மீண்டும் தன்னிச்சையாக திருத்தி நிறைவேற்றியது.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்து, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தார்வார்சந்த் கெலாட் பேசுகையில், ''பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து நீதிகளையும் இந்த மசோதா வழங்கும். இன்றைய சூழலுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமாகும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பெண் உறுப்பினர் தேவை என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்த ஆணையத்துக்கும் மாநில அரசுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது மத்திய அரசுடன் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும்.

மாநில அரசுகள் தனியாக ஓபிசி பிரிவுப் பட்டியலை வைத்துள்ளன. மத்திய அரசு தனியாக வைத்துள்ளது. இந்த ஆணையம் மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் பிரிவினர் குறித்து மட்டுமே பரிந்துரை செய்யும்.

கடந்த 1980களில் இருந்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. நிலைக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின், விரைவாக ஆணையத்தை அரசு அமைக்கும்'' எனத் தெரிவித்தார்.

இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில், பாஜக எம்.பி.பூபேந்திர யாதவ், காங்கிரஸ் எம்.பி. சாயா வர்மா, லோக் ஜனசக்தி கட்சியின் எம்.பி. ராம் குமார் காஷ்யப், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x