Last Updated : 06 Aug, 2018 06:02 PM

 

Published : 06 Aug 2018 06:02 PM
Last Updated : 06 Aug 2018 06:02 PM

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி; இருவர் உயிருடன் பிடிபட்டனர்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், மில்ட்காடாங் வனப்பகுதியில் இன்று காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் காயத்துடன் சிக்கினார்கள்.

இன்று காலை 6.15 மணிக்கு மாவோயிஸ்ட்டுகளுக்கும் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடங்கிய துப்பாக்கிச் சண்டை ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பஸ்தர் மண்டலத்தின் போலீஸ் ஐஜி விவேகானந்தா சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:

''சுக்மா மாவட்டத்தில் கோலப்பள்ளி, கோண்டா வனப்பகுதிக்கு இடையே ஏராளமான மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட்டுகளுடன் சண்டையிடுவதற்காகச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட மாவட்ட பாதுகாப்புப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினர் ஆகியோர் கூட்டாக தேடுதல் வேட்டையில் இன்று காலை 6.15 மணிக்கு இறங்கினார்கள்.

அப்போது வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினார்கள். இதற்குப் பாதுகாப்புப் படையின் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 15 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

2 பெண் மாவோயிஸ்ட்டுகள் காலில் குண்டுக்காயம் ஏற்பட்டு விழுந்தனர். அவர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டை ஒன்றரை மணிநேரம் வரை நீடித்தது.

இந்த ஆப்ரேஷன் முடிவில் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து அதிநவீன ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள், 315 ரைபிள்கள், 12 போர் கன்கள், வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், வயர்கள், பேட்டரி, மருந்துகள், மாவோயிட்டுகள் குறித்த புத்தகங்கள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினார்கள்.

கடந்த 2 வாரங்களாக நடந்த ஆப்ரேஷன் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த முறை நடந்த ஆப்ரேஷனில் கடைசிநேரத்தில் மாவோயிஸ்ட்டுகள் தப்பினார்கள். இப்போது துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.''

இவ்வாறு போலீஸ் ஐஜி தெரிவித்தார்.

இதற்கு முன் கடந்த ஜூலை 19-ம் தேதி, 4 பெண் மாவோயிஸ்ட்டுகள் உள்ளிட்ட 8 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 8-ம் தேதி 6 பெண்கள் உள்ளிட்ட 8 மாவோயிஸ்ட்டுகளை பிஜபூர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x